கட்டாயப்பாடசாலை

கட்டாயப்பாடசாலை பிள்ளைகளுக்குப் போதிக்கும் அடிப்படைக்கல்வியுடன் தொடர்ந்தும் கற்பதற்கு உதவியாக இருக்கும். பகிரங்கப் பாடசாலைகள் இலவசமானவை.

பிள்ளையைப் பதிதல்

பகிரங்கப் பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கு கிராமசபைகளே பொறுப்பாகும். பிள்ளையைப் பாடசாலைக்குப் பதிவதற்கு கிராமசபையிலோ அன்றி நேரடியாகப் பாடசாலை அதிபரிடமோ தொடர்பு கொள்ளலாம்.

பாடசாலை நிலைகள்

கட்டாயப்பாடசாலை மூன்று ஒன்றன்பின் ஒன்றான நிலைகளைக் கொண்டது:

  • சிறுவர் பாடசாலை (Kindergarten) 2 வருடங்கள் எடுக்கும்.
  • ஆரம்பப்பாடசாலை (Primarschule) 6 வருடங்கள் எடுக்கும். ஊக்கமும் உதவியும் தேவையான பிள்ளைகளுக்கு தனிப்பட்ட முறையில் விசேட கவனம் கொடுக்கப்படும்.
  • மேற்பிரிவு (Sekundarstufe I) 3 வருடங்கள் எடுக்கும். இதில் 3 வகையான வகுப்புப் பிரிவுகள் (Realschule, Sekundarschule, Bezirksschule) உண்டு. ஒவ்வொரு பிரிவும் வித்தியாசமான திறமையின் அடிப்படையில் பிரிக்கப்படும்.
  • தாய்மொழி டொச் அல்லாத பிள்ளைகளுக்கு எல்லாப் பிரிவிலும் விசேட கவனம் கொடுக்கப்படும்.

கட்டாயப் பாடசாலைக்குரிய விபரமான தகவல்களைப் பெறப் பிரசுரம் "அறோ மாநிலப்பாடசாலைகள்" பார்க்கவும்.

பகிரங்க / தனியார் பாடசாலை

பகிரங்கப் பாடசாலைகள் இலவசமானவை. இங்கு ஆண் பிள்ளைகள் பெண்பிள்ளைகள் சேர்ந்தே ஒன்றாகக் கற்பார்கள். பாடங்கள் மதச்சார்பற்றவை. அதிகமான (95%) சிறுவர்கள் இளையவர்கள் தமது கட்டாயப்பாடசாலையை பகிரங்கப் பாடசாலையிலேயே படிப்பார்கள். தனிப்பட்ட பாடசாலைகளும் உள்ளன. பிள்ளைகளைத் தனிப்பட்ட பாடசாலைக்கு அனுப்ப விரும்பும் பெற்றோர் செலவுகளைத் தாமே பொறுப்பெடுக்க வேண்டும்.

பெற்றோரின் உரிமைகளும் பொறுப்பும்

பிள்ளைகளின் தினசரிப் பாடசாலை நாட்கள் மற்றும் அவர்கள் திறமைகள் பற்றியும் பெற்றோருக்கு அறியத்தருவது பாடசாலையின் பொறுப்பாகும். அதற்காகவே பெற்றோருடன் கலந்துரையாடல் (ஆசிரியர் பெற்றோருக்கிடையில்) பெற்றோர் மாலை (பாடசாலைத் தகவல்களைப் பெற்றோருக்கு அறியத்தருதல் ) மற்றும் தகவல் நிகழ்ச்சிகள் இடம்பெறும். அதிகமாக இவை எல்லாவற்றிற்கும் பெற்றோர் பங்குபற்ற வேண்டும். பிள்ளையை ஒழுங்காகப் பாடசாலைக்கு அனுப்புவதற்குப் பெற்றோரே பொறுப்பாகும். பிள்ளை பாடங்களுக்குச் சமூகமளிக்க முடியாவிடின் (உ+மாக நோய்) அது பற்றிப் பெற்றோரே அறிவிக்கவேண்டும். வீட்டுப்பாடங்களைச் செய்து முடிக்கிறார்களா என்று கவனிப்பது மட்டுமன்றித் தினமும் பாடசாலை வேலைகள் வீட்டுப்பாடங்களைப் பார்ப்பதன் மூலம் பெற்றோரின் அக்கறையையும் உதவியையும் காட்டலாம். சுவிஸ் கல்வித்திட்டம் பற்றிய விபரம் தெரியாதவர்கள் இதற்கான டொச் அல்லாத வேறு மொழிகளில் நடக்கும் விசேட தகவல் நிகழ்ச்சிநேரங்களில் பங்கெடுக்கலாம்.

வினாக்களும் உதவிகளும்

ஏதாவது வினாக்கள் இருப்பின் பெற்றோர் எப்போதும் முதலில் வகுப்பாசிரியரை நாட வேண்டும். பெற்றோருக்கு உதவி தேவைப்படுமிடத்து வகுப்பாசிரியரே உதவி செய்வார். பிள்ளைக்கு ஏதாவது தேவைப்படுவதாக உணர்ந்தாலோ அன்றி ஏதாவது வினாக்கள் இருப்பினும் ஆசிரியரும் முதலில் பெற்றோரை நாடவேண்டும். பொதுவாகவே பெற்றோர் ஆசிரியருடன் தொடர்பைப் பேணி ஒருங்கிணைந்து செயற்படு தல் மிகவும் முக்கியம். பிள்ளை மனதில் அல்லது சூழலில் ஏதாவது கஸ்டங்களை அனுபவித்தால் பாடசாலை உளநலப்பிரிவை (Schulpsychologischer Dienst) நாடலாம். இங்கு பிள்ளைகளுக்கும் அவர்கள் பெற்றோருக்கும் இலவசமான உதவிகள் வழங்கப்படும்.